வரம் தரும் வள்ளல் சிந்தாமணி விநாயகர்.
கேட்டதை எல்லாம் அள்ளித் தரும் வள்ளல் தான் சிந்தாமணி விநாயகர். இவர் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கேதார் காட் பகுதியில் கோயில் கொண்டிருக்கிறார்.
சிந்தாமணி என்ற தெய்வீக ரத்தினம் கபில முனிவரிடம் இருந்தது. கணர் என்னும் மன்னர் எப்படியாவது அதை தனக்கு சொந்தமாக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் முனிவரிடம் இருந்து திருடினார். விநாயகரின் திருவடியில் சரணடைந்தார் கபில முனிவர். தன் பக்தனுக்கு அருள்புரிய மாறுவேடத்தில் வந்த விநாயகர் சாதுர்யமாக பேசி ரத்தினத்தை வாங்கி கபிலரிடம் கொடுத்தார். மகிழ்ச்சியில் திளைத்த கபிலர் அதை விநாயகருக்கே காணிக்கையாக கொடுத்தார். இதனால் 'சிந்தாமணி வினய்' எனப் பெயர் பெற்றார்.
சுயம்புவான விநாயகர் எட்டுக்கைகளுடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் விரும்பிய வரங்கள் கிடைக்கும். முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். இதனால் இவர் 'விக்ன ஹர்த்தா' (தடைகளை நீக்குபவர்), 'சங்கத் மோச்சன்' (தொல்லைகளை நீக்குபவர்) என்றும் அழைக்கப்படுகிறார். கேது தோஷத்தால் சிரமப்படுபவர்கள் கேது சாந்தி பூஜை செய்கின்றனர்.
0
Leave a Reply