ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (25.03.2025) அன்று வேளாண்மைத்துறை சார்பாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் பங்கேற்புடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் 14 இடங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. ஒரு கிராமம், ஒரு பண்ணையம், ஒரு இலட்சம், ஒரு மாதம் என திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தியது போல் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தினை விருதுநகர் மாவட்டத்திலும் செயல்படுத்திட மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ), விருதுநகர் அவர்களால் 22.03.2025 அன்று திருச்சியில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து அனைவருக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இரண்டு வட்டாரங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் பங்கேற்புடன் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்திற்கான புறம்போக்கு நிலத்தினை தேர்வு செய்திடவும், சாலை வசதி மற்றும் நீர்பாசன வசதி உள்ள இடங்களாக தேர்வு செய்திடவும் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அவர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு எண்ணம் ஒருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகளின் பங்குத் தொகையுடன் அமைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2.5 ஏக்கர் பரப்பளவு பட்டா நிலம் மற்றும் தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து விவசாயிகளின் பங்குத் தொகையுடன் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்)திரு.ஜே.ஜார்ஜ் மைக்கேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி நாச்சியார் அம்மாள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.அரவிந்த், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply