விருதுநகர் மாவட்டத்திலுள்ள முக்கிய தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை காண்பதற்காக பத்திரிக்கையாளர்களுக்கான ஒரு நாள் பாரம்பரிய மரபுப் பயணத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், (18.04.2025) ஏப்ரல் 18 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் உலக பாரம்பரிய நாளாக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து ஏற்பாடு செய்த விருதுநகர் மாவட்டத்திலுள்ள முக்கிய தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை காண்பதற்கு பத்திரிக்கையாளர்களுக்கான ஒரு நாள் பாரம்பரிய மரபு பயணத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலக பாரம்பரிய தளங்களின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 18 ஆம் நாள் உலக பாரம்பரிய நாள் கடைபிடிக்கப்படுகிறது.உலக பாரம்பரியத் தளங்கள் நமது கலாச்சார மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் மதிப்புமிக்க பகுதியாகும்.மேலும் அவற்றைப் பாதுகாத்து வரலாற்றின் பெருமையை வெளிப்படுத்துவது நமது கூட்டுப் பொறுப்பாகும்.மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் 4 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என மாண்புமிகு நிதி, சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
அதன்படி, நரிக்குடி மறையூர் சத்திரம், ராஜபாளையம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம் மற்றும் புடைப்புச் சிற்பங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மம்சாபுரம் கிராமத்திலுள்ள நாயக்கர் கால மண்டபம் மற்றும் பிள்ளையார் நத்தம் மண்டபம் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட உள்ளன.
அதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்கள் குறித்து, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, முக்கிய தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை காண்பதற்காக பத்திரிக்கையாளர்களுக்கான ஒரு நாள் உலக பாரம்பரிய மரபுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒரு நாள் பாரம்பரியமரபுபயணத்தில்பாவாலிகிராமத்தில்உள்ளசெப்புப்பட்டயத்தினைபார்வையிட்டனர்.இச்செப்புப்பட்டயத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் ஏற்றப்பட்ட பின்னர் அவருக்கு ஆதரவாயிருந்த நாகலாபுரம், கோல்வார்பட்டி, ஏழாயிரம் பண்ணை, கடலக்குடி, குளத்தூர் ஆகிய பாளையப்பட்டுக்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. மேஜர் பானர்மேன் கி.பி. 1799-இல் அக்டோபர் 21-ஆம்தேதி வெளியிட்ட செப்பேட்டு ஆணையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்ப்போருக்கு கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட கதிதான் நேரும் என எச்சரித்துள்ள செய்தி செப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் பாளையக்காரர்கள் கோட்டைகள் கட்டிக் கொள்வதற்கும், பீரங்கிகள், துப்பாக்கிகள் ஈட்டிகள், வலையங்கள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொள்ள அவ்வாணை மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அதிகாரிகளும், வேலைக் காரர்களும், மக்களும் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவ்வாணையில் கூறப்பட்டுள்ளது.
பின்னர், பாவாலியில் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த குமாரசாமி கோவில் கல்வெட்டுகள், சிற்பங்களையும் பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து, செங்குன்றாபுரத்தில் உள்ள ‘கைலாசநாதர் கோயில்’ பிற்காலப் பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட சிவன் கோயிலை பார்வையிட்டனர்.தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படவுள்ள திருவில்லிபுத்தூர்- மதுரை சாலை பிள்ளையார் நத்தத்தில் உள்ள திருமலை நாயக்கர் காலத்தில் பயணமாக செல்லும் பொதுமக்கள் தங்குவதற்காக 30 தூண்களுடன், ஒவ்வொரு தூண்களிலும் தலா 12 வெவ்வேறு சிற்பங்களுடன், மொத்தம் 360 சிற்பங்கள், நுழைவு வாயிலின் இருபுறமும் யானை வடிவ கலைசிற்பங்களுடன் கட்டப்பட்ட கல்மண்டபத்தினை பார்வையிட்டனர்.
பின்னர், மம்சாபுரம் அருகே உள்ள கல்தூண் மண்டபத்தில், 30க்கும் மேற்பட்ட தூண்களில் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளதையும், யாழி சிற்பங்கள் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள நாயக்கர் காலத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளதையும் பார்வையிட்டனர்.மேலும், ராஜபாளையம் மீனாட்சிபுரம் அருகில் அமைந்துள்ள ஆமை மலையில் உள்ள குகைத் தளங்களில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டப் பாறை ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்கள் பழங்கால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்துகிறது. 3 குகைகளில் ஒரு குகையில் மட்டும் பழங்கால மனிதர்களின் கூட்டு வாழ்க்கையை ஒட்டு மொத்தமாகப் பிரதிபலிக்கிறது.இதில் வேட்டைக் காட்சிகள், மனிதர்கள் ஒரு புலியை சுற்றிவளைத்து தாக்குதல், ஆரவாரக் காட்சிகள், சூரியன் மற்றும் சந்திரன், யானை கருவுடன் இருக்கும் விலங்குகள் ஆகியவை கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ளன. குழு தலைவன் தலையில் கிரீடம் அணிந்துள்ளது போன்று வரையப்பட்டுள்ளது.
இம்மலைக்கு அருகிலேயே வெண்ணை உருண்டை பாறை ஒன்று மகாபலிபுரத்தில் உள்ளது போன்று அமைந்துள்ளது. இக்கல் ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும், வரலாற்று முக்கியத்துவமாகவும் பார்க்கப்படுகிறது.இப்பாறைக்கல் வான் இறைக்கல் என்றும் அழைக்கப்படுகிறது. கருங்கலால் ஆன பெரிய உருண்டை வடிவத்தில் தோற்றமளிக்கிறது. இதனை பார்வையிட்டனர்.இப்பயணத்தில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பெ.ரா.வெற்றிவேந்தன்,அருங்காட்சிய காப்பாட்சியர் திரு. பால்துரை, இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் திரு.கந்தசாமி, தொல்லியல் துறை அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply