திருவில்லிபுத்தூர் வட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டார பகுதிகளில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ள பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தலைமையில், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் செல்வி கே.சங்கீதா .I A S., அவர்கள் (07.08.2026) ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் (Special Area Development Programme) மேற்கு தொடர்ச்சி மலை திட்டப்பகுதிகளான உதகமண்டலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் மலைப்பாங்கான மற்றும் குறிப்பிட்ட பின்தங்கிய பகுதிகளில் மண் அரிப்பைத் தடுத்தல் மற்றும் நீர் வளத்தைப் பெருக்குதல், முழுமையான நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்புப் பணிகள், மலைப் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்விட மேம்பாட்டிற்கான சமுதாயக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பிற பொதுக் கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டாரப் பகுதிகளில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2023- 24 இன் கீழ் ரூ.1.51 கோடியில் 3 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2024- 25 இன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.7.22 கோடி மதிப்பிலான 34 பணிகளில் 29 பணிகளும், 2025- 26 இன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2.65 கோடி மதிப்பிலான 3 பணிகளில் 2 பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
ஆக மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.11.38 கோடி மதிப்பிலான 40 திட்டப்பணிகளில், ரூ.8.16 கோடி மதிப்பிலான 34 திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவில்லிபுத்தூர் வட்டார பகுதி விழுப்பனூர் ஊராட்சியில் ரூ.37.83 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், அத்திக்குளம்-செங்குளம் கிராமத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, பணிகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தரமான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்தும், பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தரத்துடன் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, திட்டத்தின் முழுப் பயனும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்(சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், மதுரை) திரு.ரமேஷ்குமார், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் திரு.அருளானந்தம், தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply