பிளவுக்கல் பெரியாறு அணைப் பகுதியில் பூங்கா புணரமைக்கும் பணி, அதன் உள்கட்டமைப்புகளை புதுப்பித்தல் மற்றும் அணைக்கு செல்லும் அணுகுசாலையினை மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், கான்சாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிளவுக்கல் பெரியாறு அணைப் பகுதியில் நீர்வளத்துறை மேல் வைப்பாறு இராஜபாளையம் வடிநிலக் கோட்டம் சார்பில், ரூ.10 கோடி மதிப்பில் அணையின் பூங்கா புணரமைக்கும் பணி, அதன் உள்கட்டமைப்புகளை புதுப்பித்தல் மற்றும் அணைக்கு செல்லும் அணுகுசாலையினை மேம்படுத்தும் பணிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், கான்சாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிளவுக்கல் பெரியாறு அணை பூங்காவில் தற்போது உள்ள பார்வைக் கோபுரம், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கழிப்பறைகள் போன்ற வசதிகள் பலவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் பிளவுக்கல் பெரியாறு அணைக்கு செல்லும் அணுகுசாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.கடந்த 25 ஆண்டுகளாக இப்பூங்கா புதுப்பிப்பு செய்யப்படாத காரணத்தால், உள்ளூர் பொதுமக்களிடமிருந்து பூங்காவை மேம்படுத்துவதற்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுநகர் வருகையின் போது, "வத்திராயிருப்பு வட்டம், கான்சாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிளவுக்கல பெரியாறு அணை பூங்காவை நவீனமயமாக்குதல், அதன் உட்கட்டமைப்புகளைப் புதுப்பித்தல் மற்றும் அணுகுசாலையை மேம்படுத்துதல் ஆகிய பணிகளை ரூ.10 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்" என்று அறிவித்தார். முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி, நிர்வாக அனுமதி பெற்று, பூங்காவை பாதுகாப்பு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்துவதற்காக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பிளவக்கல் பெரியாறு பூங்கா எல்லைப் பகுதிகளைச் சுற்றி பாதுகாப்பு சுவர் மற்றும் கம்பிவேலி அமைத்தல், நுழைவு வாயில் வளைவு (Entrance Arch) அமைத்தல், மரத் தோட்டம் (Tree Garden), மீன்காட்சி பூங்கா(Aquarium Park), நதி காட்சி நடைபாதை (River View Walkway) அமைத்தல், தியானத் தோட்டம் (Zen Garden), உடற்பயிற்சி மற்றும் குழந்தைகள விளையாட்டு பகுதி அமைத்தல், யோகா வளாகம் (Yoga Plaza), பாதுகாப்பு அறை(Security Gabin), கழிப்பறை கட்டிடம் (Toilet), பெரியாறு அணை வரையிலான கிழவன்கோயில் முதல் அணுகுசாலையினை மேம்படுத்துதல், நீரூற்றுகளைப் புதுப்பித்தல், பாதசாரிகள் நடைபாலம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் மற்றும் பிற அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் பொறி.சு.மதனசுதாகரன், செயற்பொறியாளர் பொறி.மு.மகேஸ்வரி, திருவில்லிபுத்தூர் நகர்மன்றத்தலைவர் திரு.ரவிக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் பொறி.சி.ஜான்சி அனிதா, உதவி பொறியாளர்கள் பொறி.உமாபதி, பொறி.அருண்குமார், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் திரு.மல்லி கு.ஆறுமுகம்(திருவில்லிபுத்தூர்), திரு.சிந்துமுருகன்(வத்திராயிருப்பு), உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply