25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

Nov 15, 2025

கீரை அடை .

தேவையான பொருட்கள் :- புழுங்கல் அரிசி1 கப், பாசிப்பருப்பு முக்கால் கப், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு தலா அரை கப், உளுந்து கால் கப், முருங்கைக் கீரை(உதிர்த்தது)2 கப்,சின்னவெங்காயம்1கப், மிளகாய்த்தூள்2 டீஸ்பூன், தேங்காய்த் துறுவல் அரை கப்,பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் அல்லது சோம்பு 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு. செய்முறை: -அரிசியைத் தனியாகவும், பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்தும், ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். அரிசியைச் சற்று கரகரப்பாக அரைத்து, பிறகு பருப்புக் கலவை, சோம்பு சேர்த்து(லேசாகத் தண்ணீர் தெளித்து) கரகரப்பாக அரைத்தெடுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். அதில் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்(சோம்பு சேர்க்காவிட்டால்) கீரை, வெங்காயம், தேங்காய்த் துறுவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறுசிறு அடைகளாக ஊற்றுங்கள். சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவைத்தெடுங்கள்.சட்னி சாம்பாருடன் சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்.முருங்கைக் கீரைதான் என்றில்லை, முளைக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி போன்றவற்றையும் அடைக்கு உபயோகிக்கலாம். 

Nov 15, 2025

வெந்தயக் கீரை குழம்பு  .

தேவையான பொருட்கள் :- வெந்தயக் கீரை4 கட்டு,சின்னவெங்காயம்1கப், பூண்டு அரை கப், புளி எலுமிச்சை அளவு, தக்காளி4, மிளகாய்த் தூள்3 டீஸ்பூன், தனியாத்தூள்1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம் தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன். செய்முறை: -கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வையுங்கள். பூண்டு, வெங்காயத்தை தோல் நீக்கிவையுங்கள். புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வையுங்கள். எண்ணெயைக் சூடாக்கி, கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம் தாளியுங்கள். பிறகு வெங்காயம், பூண்டு, கீரை, தக்காளி, ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக, ஒன்று வதங்கியதும் மற்றொன்று எனச் சேர்த்து வதக்குங்கள். தக்காளியுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, பச்சை வாடை போனதும் புளிக் கரைசலை ஊற்றுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.சாதம், இட்லி,தோசை வகையறாக்களுக்கு மேட்சான சைடு டிஷ் இது.

Nov 08, 2025

கற்பூரவல்லி துவையல் .

தேவையான பொருட்கள்:கற்பூரவல்லி இலை -10,பச்சை மிளகாய் -3,சின்ன வெங்காயம்- 20,எண்ணெய்,உளுந்தம் பருப்பு,தேங்காய் துருவல்,பெருங்காயத்துாள்- சிறிதளவு, கொத்தமல்லி தழை,பூண்டு, புளி,உப்பு, தண்ணீர்- தேவையான அளவு,செய்முறை:வாணலியில் எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு, துண்டாக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், பூண்டு, பெருங்காயத்துாள், கற்பூரவல்லி இலை, கொத்தமல்லி தழை, தேங்காய் துருவல், புளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். ஆறிய பின், தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.சூப்பரான, 'கற்பூரவல்லி துவையல்!' தயார். சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து சாப்பிட அபாரமாக இருக்கும். சளித் தொல்லை நீங்கும்.

Nov 08, 2025

கறிவேப்பிலை லட்டு.

தேவையான பொருட்கள்:உலர்ந்தகறிவேப்பிலை- 2 கப்,பொரிகடலை- 1 கப்,பாதாம் பருப்பு -15,பேரீச்சம்பழம்- 15,நாட்டு சர்க்கரை- 50 கிராம்,ஏலக்காய், நெய் தேவையான அளவு.செய்முறை:பொரிகடலை, பாதாம் பருப்பு, கறிவேப்பிலையை நன்கு வறுக்கவும்.அத்துடன் விதை நீக்கிய பேரீச்சம்பழத்தை சேர்த்து வதக்கவும். ஆறியதும் அரைத்து, ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை, நெய் கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.சுவை மிக்க, 'கறிவேப்பிலை லட்டு!' தயார். 

Nov 08, 2025

தேன் மிட்டாய்.

தேவையான பொருட்கள்:உளுந்தம் பருப்பு - 2 கப்,மைதா மாவு - 0.5 கி,அரிசி மாவு - 0.5 கி,சர்க்கரை - 1.5 கி,புட் கலர் - சிறிதளவு,எண்ணெய்,தண்ணீர்- தேவையான அளவு.செய்முறை:உளுந்தம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும். அதில் மைதா, அரிசி மாவுகளை கலந்து, சிறு உருண்டைகளாக பிடித்து, கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையுடன் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து பாகாக்கி, பொரித்த உருண்டைகளை அதில் போடவும். நன்றாக ஊறிய பின் பிரித்தெடுக்கவும்.சுவை மிக்க,'தேன் மிட்டாய்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

Nov 08, 2025

சத்து மாவு.

தேவையான பொருட்கள்:கேழ்வரகு - ½ கிலோ, கம்பு - ½கிலோ, சம்பா கோதுமை - ½ கிலோ, பாசிப்பயறு -½ கிலோ, நிலக்கடலை - 1/4கிலோ, சிவப்பரிசி-¼ கிலோ, சோளம் -¼கிலோ, குதிரைவாலி - ¾ கிலோ, சாமை – 1/4கிலோ, வரகு – 1/4கிலோ, கொள்ளு – 1/4 கிலோ, கருப்பு உளுந்து -½ கிலோ, பொட்டுக்கடலை - ¼ கிலோ, சிவப்புக் கொண்டைக்கடலை - 100 கிராம், நாட்டுச் சோளம் - 100 கிராம், பாதாம் -100 கிராம்.பிஸ்தா பருப்பு-100 கிராம், முந்திரி பருப்பு - 100. கிராம், சுக்கு - 50 கிராம், ஏலக்காய் - 10 கிராம்.செய்முறை:மேலே உள்ள பொருட்களை நன்கு சுத்தம் செய்து வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து, அதன் பிறகு ஒன்றாகச் சேர்த்து மெஷினில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது இந்த மாவினைச் சத்துமாவு உருண்டையாகவோ, கஞ்சியாகவோ, புட்டுப் போலவோ, மால்ட்டாகவோ, தோசையாகவோ, பேன் கேக்காகவோ வகை வகையாகத் தயாரித்து உட்கொள்ளலாம். குறிப்பாக,வளரும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பலவீனமான முதியோர்களுக்கு இந்தச் சத்துமாவு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த ஓர் அற்புத உணவு.

Nov 08, 2025

முருங்கைக்கீரைப் பொடி.

தேவையான பொருட்கள்:முருங்கைக்கீரை - 1 கப் (நிழலில் உலர்த்தியது அல்லது லேசாக வறுத்தது),உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 5-7 (உங்கள் காரத்திற்கேற்ப),உப்பு - தேவையான அளவு,சீரகம் - 1 டீஸ்பூன்,பூண்டு - 2-3 பற்கள்,பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை:முருங்கைக்கீரையை நன்கு கழுவி, நிழலில் உலர்த்தவும் அல்லது வெறும் கடாயில் லேசாக வறுத்து எடுக்கவும். கீரை காய்ந்து, மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். அதே கடாயில், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.பின்னர், மிளகாய், சீரகம், பூண்டு, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வறுக்கவும்.வறுத்த பொருட்களை ஒரு கலவை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, உலர்ந்த முருங்கைக்கீரையை சேர்த்து நன்கு ஆற விடவும்.முழுவதுமாக ஆறியதும், மிக்சியில் போட்டு மென்மையான பொடியாக அரைக்கவும். இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்கீரை பொடியை இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். 

Nov 08, 2025

மொறு மொறு காளான் பக்கோடா.

தேவையான பொருட்கள்:காளான் - 200 கி,கடலை மாவு - 1 கப்,அரிசி மாவு - 1/4 கப்,வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது),இஞ்சி - சிறிது,மிளகாய் தூள் - 2 ஸ்பூன் (விருப்பப்பட்டால்),உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு ,செய்முறை:காளானை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு பெரிய பாத்திரத்தில் நறுக்கிய காளான், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பிற மசாலாப் பொருட்களை சேர்க்கவும்.அதனுடன் கடலை மாவு மற்றும் அரிசி மாவைச் சேர்க்கவும்.சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவு மிகவும் நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.சூடான எண்ணெயில் பிசைந்த காளான் கலவையை உதிர்த்துப் போடவும்.பக்கோடா பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை பொரித்தெடுக்கவும்.சுவையான காளான் பக்கோடாவை சூடாகப் பரிமாறவும்.

Nov 01, 2025

கவுனி அரிசி பொங்கல்.

தேவையான பொருட்கள் - 1கப்கருப்பு கவுனி அரிசி, மூன்றரை  கப் தண்ணீர்,1கப்வெல்லம்,1ஸ்பூன் ஏலக்காய் தூள்,8முந்திரிப் பருப்பு,3டேபிள்ஸ்பூன்நெய்,கால் கப்தேங்காய்த்துருவல்செய்முறை -  கவுனி அரிசியை சமைப்பதற்கு முன்பாக அதிக நேரம் அதாவது6 மணி முதல்8 மணி வரை ஊற வைக்கவும். பிறகு ஊறிய அரிசியை குக்கரில் ஒன்றுக்கு மூன்று அல்லது மூன்றரை தண்ணீர் விட்டு 6 விசில் விடவும்.குக்கரை திறந்து அரிசியை ஒரு விரலால் எடுத்து நசுக்கி பார்த்தால் வெந்தது தெரியும். அரிசியை பார்க்கவே வேகாதது போல் தான் இருக்கும். ஆனால் நசுக்கி பார்த்தால் உள்ளே நன்கு வெந்திருக்கும். இதுவே சரியான பக்குவம்.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து கொண்டு அரைக் கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் அளவுக்கு சூடு பண்ணவும்.பிறகு இதனை பொங்கல் செய்யும் பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். ஏனெனில் அடியில் மண், தூசி ஏதேனும் இருக்க வாய்ப்பு உள்ளது.பிறகு இந்த வெல்லக்கரைசலுடன் வேக வைத்த கவுனி அரிசியை சேர்த்து அடுப்பை அதிக தணலில் வைக்கவும்.பிறகு ஒரு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து துருவிய தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.பிறகு இதனை நன்கு கிளறி மற்றொரு சிறிய கடாயில் நெய் விட்டு முந்திரிப்பருப்பை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.மிகவும் சத்தான சுவையான செட்டிநாட்டு கருப்புகவுனி அரிசி பொங்கல் ரெடி.

Nov 01, 2025

பழம் பொரி.

தேவையான பொருட்கள்:நேந்திரம் பழம்- 3,மைதா மாவு - 1 கப்,சர்க்கரை- 1 கப்,அரிசி மாவு - 0.25 கப், மஞ்சள் துாள். சமையல் சோடா, ஏலக்காய் துாள்- சிறிதளவு,தேங்காய் எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:நேந்திரம்பழத்தைத் தோல் நீக்கி, நீளவாக்கில் நறுக்கவும். மைதா மாவு, அரிசி மாவு, சர்க்கரை, மஞ்சள் துாள். ஏலக்காய்த் துாள், உப்பு, சமையல் சோடா மற்றும் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், பழத்துண்டுகளை மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.சுவைமிக்க, 'பழம் பொரி!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

1 2 ... 23 24 25 26 27 28 29 ... 72 73

AD's



More News